ஒன்றிணைந்த தயாரிப்பாளர்கள்
திரைப்படத்துறையின் நலன் கருதி 36 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.. இதோ அவ்வறிக்கை
“தற்சமயம் “கொரோனா வைரஸ்” தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்என்பது அனைவரும் அறிந்ததே. நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பல அணிகளாக பிரிந்தாலும் திரைத்துறையை சீர்தூக்கி நிலைநிறுத்தும் விஷயத்தில் நாம் அனைவரும் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். நமக்கு உண்டான பிரச்சனையை நாமே ஒருங்கிணைந்து தீர்த்துக்கொள்ள போவதால் இதற்கு நீதிமன்றமோ, நீதிபதியோ, பதிவாளரோ மறுப்பு சொல்லப்போவதில்லை.
நமது சக உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி நமது திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் மன நிம்மதியாக சிறப்பாக செயல்பட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய திரு.பாரதிராஜா, திரு.எஸ் ஏ சந்திரசேகர், திரு.எஸ் தாணு, திரு.கேயார், திரு.டிஜி தியாகராஜன், திரு.முரளிதரன் இவர்களுடன் மேலும் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 42 பேர் கொண்ட இந்த குழு திரைத்துறையில் அனைத்து துறைகளுடனும் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து கீழ்கண்ட குழுவுக்கு ஆதரவும், ஆலோசனைகளையும் நல்கி திரைத்துறை சீறும் சிறப்புமாக விளங்கிட நம் ஒத்துழைப்பினை நல்கிடுவோம்.
ஒன்றுபடுவோம்…
உயர்ந்து நிற்போம்”