மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது பெரிய வரப்பிரசாதம் : ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

‘‘நேற்று தான் சந்தித்தது போல இருக்கிறது. ஆனால் 25 வருடங்களாக நானும் ரஹ்மானும் ஒன்றாக இணைந்து பயணித்திருக்கிறோம்” என்றபடியே ‘காற்று வெளியிடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேச ஆரம்பித்தார் இயக்குநர் மணி ரத்னம்.
கார்த்தி, கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் தயாரான இந்த இசை வெளியீட்டு விழாவில்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் மணிரத்னம் தொடர்ந்து பேசியதாவது ”25 வருடம் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயணித்துள்ளோம், அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். காற்று வெளியிடை திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும். நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன்.
அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் . அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்.
ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்து விடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர்.
நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன். அடுத்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இனைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னாள் கேட்டு கொள்கிறேன் என்றார் இயக்குநர் மணிரத்னம்.
இந்த 25 ஆண்டு பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்ட போது ”இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் வைரமுத்து சார் மற்றும் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு டிவைனான அனுபவம். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார் தனக்கே உரிய வழக்கமான ஸ்டைலோடு!