ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.