குழந்தைகள் விரும்பும் பார்பி டால் ஆக மாறிவிட்டேன் -கோமல் சர்மா!

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.. இப்போது வெளியாகி உள்ள ஷாட் பூட் த்ரீ படத்தில் இவரது நடிப்பிற்காக பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக விலங்குகள் நல அமைப்பாளர்கள் பலரும் இவரை அழைத்து பாராட்டி வருவது தான் ஆச்சரியமான ஒன்று.. இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள் குறித்தும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் கோமல் சர்மா.
“இந்த படம் குழந்தைகளையும் விலங்குகளையும் மையப்படுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம். பொதுவாகவே எனக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவைகளுக்கான ஒரு குரலாக இந்த படத்தின் மூலம் மாறியது எனக்கு மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல பிரபல இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையில் உருவான இந்த படத்தில் நடித்ததும் இன்னொரு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியையும் அவர் தனது இசையால் கவிதையாக மாற்றி இருந்தார்.. மாநாடு படத்தில் வெங்கட்பிரபு டைரக்சனில் நடிக்க வாய்ப்பு தேடி வந்து சில காரணங்களால் அது மிஸ் ஆனது. ஆனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னொரு சந்தோசம். அவருக்குள் ஒரு மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.