அப்பாவி மக்களுக்கு பஞ்சாயத்து செய்ய நீங்கள் யார்? : லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு மீது ஸ்ரீப்ரியா காட்டம்

#Sripriya #Khushboo #LakshmyRamakrishnan
அப்பாவி மக்களின் குடும்பங்களில் மட்டும் தான் பிரச்சனைகள் பெருகிப்போய் கிடக்கின்றன என்கிற ரேஞ்சில் நாலு சுவற்றுக்குள் பேசித்தீர்க்க வேண்டிய குடும்பப் பிரச்சனைகளை கேமரா முன்னால் பேசி பஞ்சாயத்து செய்யும் வேலையைத்தான் செய்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்று பல சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற நிலையிலும் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிகழ்ச்சியால் தீர்ந்த பிரச்சனைகளை விட அதிகரித்த பிரச்சனைகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் சன் டிவியிலும் ஆரம்பமானது. குஷ்பு நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.
இப்படி நடிகைகள் அப்பாவி மக்களின் வறுமையை பயன்படுத்தி காசு சம்பாதிப்பதை காட்டமாக விமர்சித்திருக்கிறார் மாஜி நடிகை ஸ்ரீப்ரியா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது ”மக்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் இருக்கிறது. குற்றச்செயல்கள் செய்திருந்தால் அதனை தீர்க்க பல்வேறு சட்ட பிரிவுகள் இருக்கிறது. ஆனால் அதனை விட்டுவிட்டு சினிமா நடிகைகள் நடுவர்களாக இருந்து கொண்டு இது போன்ற பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது நல்லதல்ல. இதனை நிறுத்த வேண்டும். மக்களின் பிரச்சனையை தீர்க்க இது ஒரு தளம் என்றால் அதனை கேமரா இல்லாமல் செய்யுங்கள். அவர்களை சரியான நபர்களிடன் அழைத்து செல்லுங்கள். வழக்கறிஞர்கள், ஆலோசகர்களிடம் அழைத்து செல்ல உதவுங்கள்” என்று காட்டமாக கூறியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.