நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்நிகழ்வையடுத்து நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அவரின் வரவேற்புரையில், ” நண்பன் குழுமம் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறதே ஏன்? கலைஞர்களுக்கு விருது வழங்குகிறார்கள் ஏன்? திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்கள். இங்கு ஏராளமான படத்தை தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறது. இதில் இவர்கள் என்ன புதிதாக சாதிக்கப் போகிறார்கள்? என ஏராளமான கேள்விகள் உங்களிடத்தில் இருக்கும். இதற்கு பதில் சொல்ல நண்பன் குழுமத்தில் பலர் இருக்கிறார்கள்.
நான் நண்பன் குழுமத்தை பற்றிய ஒரு முக்கியமான விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பன் -யாருக்கு உதவி தேவைப்படுகிறதே.. அவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முழு அன்புடன் உதவி கரம் நீட்டுகிறது.
நண்பன் குழுமம் கலை கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆதரவளிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காகவே நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை மற்றும் கலாச்சார கருவூல மையம் எனும் புது முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு அனைவரின் ஆதரவு ஒத்துழைப்பும் தேவை என கூறி, இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்” என்றார்.