சண்டி வீரன் – விமர்சனம்

மீபத்திய இளம் இயக்குநர்களில் சமூகப் பிரச்சனைகளை முன் வைத்து படமெடுத்து வரும் இயக்குநர்களில் சற்குணமும் ஒருவர்.

கிராமத்தை கதைக்களமாகக் கொண்டு ரிலீசான அவரது களவாணி, வாகைசூடவா இரண்டு படங்களும் ரசிகர்களியே பெரிய வரவேற்பைப் பெற்று கவனத்தை ஈர்த்தவை.

அந்த வகையில் இந்தப் படத்தையும் கிராமத்து மண்வாசனையோடு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலேயே முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் தண்ணீர் பிரச்சனையை முன் வைத்து கிராமத்து மண்வாசனையோடு பிண்ணப்பட்டிருக்கும் கதை தான் இந்த சண்டிவீரன்.

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்குக் கிளம்பி வரும் அதர்வா எந்த வேலையுல் இல்லாமல் அதே ஊரில் உள்ள பெரிய மனுஷனான லாலின் மகள் ஆனந்தியை காதலிக்கிறார்.

அவர் இருக்கும் நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அவர்கள் பக்கத்து ஊரான வயல்காட்டிலோ உப்புத்தண்ணீர் தான். இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் அந்த ஊர் மக்களுக்கு ஒரே குடிநீர் ஆதாரம் இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் ஓரே ஒரு குளம்.

அந்த குளமும் எனக்குத்தான் சொந்தம் என்று சொல்லி வயல்பாடி ஊருக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார் லால்.

தண்ணீர் என்பது எல்லோரும் பொதுவானது அதை யாரும் சொந்தம் கொணடாட முடியாது என்று சொல்லும் அதர்வா அந்தக் குளத்தை ஏலத்தில் எடுத்து வயல்பாடி கிராமத்து மக்களுக்கு தர ஆசைப்படுகிறார்.

அதற்காக அவர் எடுக்கும் முயற்சி பலித்ததா? ஆனந்தியுடனான காதல் என்னவானது? என்பதே கிளைமாக்ஸ்.

முதல் காட்சியிலேயே மொட்டைத் தலையுடன் கட்டி இழுத்து வரப்படும் அதர்வாவைப் பார்த்தவுடன் அட இன்னொரு பரதேசியா என்று சந்தேகம் கிளம்ப அடுத்த காட்சியில் அதை மாற்றி கதையை கிராமத்துப் பக்கம் நகர்த்திக் கொண்டு போகிறார்கள்.

காதலி ஆனந்தியுடன் காதல், இளவட்டப் பசங்களுக்கே உரிய குறும்புத் தனங்கள், பக்கத்து ஊருக்கு பிரச்சனை என்று வரும் போது நியாயத்தின் பக்கம் நிற்கும் தைரியம் என அவர் வருகிற காட்சிகள் எல்லாமே படு விறுவிறுப்பு…

பருவம் வந்து பத்து நாட்கள் கூட ஆகியிருக்காது என்கிற தோற்றத்திலேயே வரும் ஆனந்தி நடிப்பிலும், அசல் கிராமத்துப் பெண் போல பாவாடை தாவணியில் வந்து ரசிகர்களை கிறங்கடிப்பதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கிராமத்து ஜனங்களுக்கே உரிய வீம்பு, வீரம், கோபம், பாசம் என எல்லாவற்றையும் விரவி விட்ட இயக்குநர் நாட்டு வெடிகுண்டு, அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எல்லாம் அசால்ட்டாக கையாண்டிருக்கிறார்கள்.

கிராமத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். 3 ஜி சிக்னல் எந்த தடங்களும் இல்லாமல் கிடைக்கிறது. வீடியோ கால் பேசுகிறார்கள் என்று கிராமத்தின் முன்னேற்றத்தை காட்டிய இயக்குநர் வயல்பாடிக்கு தண்ணீர் தான் பிரச்சனை என்றால் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியிருந்தாலோ? அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலோ ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அதையெல்லாம் சுத்தமாக மறந்து விட்டு ஒரே ஒரு பெரிய மனுஷனின் வீம்புத் தனத்தால் ஒரு ஊரே பாதிக்கப்படுவதாக காட்டியிருப்பது என்பது மட்டும் நம்பும்படியாக இல்லை.

மக்களின் முக்கியப் பிரச்சனையான தண்ணீர் பிரச்சனையை முன் வைத்து கிராமத்து வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்த அந்த பொறுப்புக்காகவே சற்குணத்தின் இந்த சண்டி வீரனை வரவேற்கலாம்.

AnandhiAtharvaaChandi Veeran - ReviewChandi Veeran Movie Review
Comments (0)
Add Comment