ஒரு புத்தகத்திற்கு ஒவ்வொரு பக்கமும் முக்கியம் என்றாலும் இறுதிப்பக்கம் மிக முக்கியம். ஏன் என்றால் கதையின் முக்கியத் திருப்பம் அல்லது திருப்பத்திற்கான முடிவு இறுதிப்பக்கத்தில் தான் இருக்கும். அதேபோல் இந்தப்படமும் நம்மை இறுதிப்பக்கத்தை நோக்கி பரபரப்பாக நகர வைக்கிறது. முதல் படத்திலே திரைக்கதையில் நல்ல கவனம் செலுத்தியிருக்கும் மனோ வெ கண்ணதாசனுக்கு வாழ்த்துகள்
படத்தின் துவக்கத்திலே ஒரு கொலை நடக்கிறது. அந்தக்கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தவரை தூண்டிய முக்கிய குற்றவாளி யார்? என்ற இன்வெஸ்டிகேசனில் படம் துவங்குகிறது. மிகவும் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் காட்சிகளின் நகர்வும் கதையின் உணர்வும் நமக்குள் உட்கார்ந்து கொள்கிறது.
படத்தின் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன் நாயகன் ராஜேஷ் பாலச்சந்திரன் உள்பட படத்தில் தோன்றிய அனைவரும் இயல்பை மீறாமல் நடித்துள்ளனர் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையில் பொருந்தி இசைக்கின்றன. பிரவின் பாலுவின் ஒளிப்பதிவில் பெரியளவில் நிறைகள் இல்லாவிட்டாலும் குறையொன்றும் இல்லை.
பரபர திரைக்கதை நறுக் நறுக் என்ற வசனங்கள் படத்தின் பெரிய ப்ளஸ் என்றாலும் பல இடங்களில் மேக்கிங் தரம் குறைவாக இருப்பது மைனஸ் பாலியல் தேவை சார்ந்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததும் படத்தோடு ஒன்ற முடியாத சூழலுக்கு நம்மை தள்ளிவிடுகிறது. இருப்பினும் சிறிய டீமை வைத்து மிக நல்ல முயற்சியை எடுத்துள்ளமைக்கு படக்குழுவைப் பாராட்டலாம்
3/5