காதல் கண் கட்டுதே – விமர்சனம்

RATING : 2.8/5

‘காதல் கண் கட்டுதே’

டைட்டிலில் இருக்கிற எளிமை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தென்படுகிறது! ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் என முற்றிலும் புதியவர்களின் பங்களிப்பில்ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு யதார்த்தமான காதலைப் பார்த்த உணர்வைத் தருகிறது இந்தப்படம்!

காதலை கடந்து போகாத மனிதனே இவ்வுலகில் இருக்க முடியாது. உலகத்தையே மறக்கடிக்கச் செய்கிற அதே காதலின் உன்னதமான தருணங்களில் தான் கண் கட்டுகிற அளவுக்கு இம்சைகளும் இருக்கும். அப்படி ஒரு எளிமையான காதல் கதையை எவ்வளவு தூரத்துக்கு யதார்த்தமாகத் தர முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு யதார்த்தமாக தந்து ”சரக்குள்ளவர்” என்று நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவராஜ். ஆர்

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் நண்பனின் சிபாரிசில் அவன் வேலை செய்யும் பைக் ஷோரும் ஒன்றிலேயே வேலைக்கு சேர்கிறார் ஹீரோ கே.ஜி.

அவரும் தினசரி பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை செய்யும் ஹீரோயின் அதுல்யாவும் பல ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி, பின் காதலர்களாகிறார்கள்.

வேலை காரணமாக கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு மாற்றலாகிப் போகும் அதுல்யாவிடம் அங்கு அலுவலகத்தில் அவரோடு வேலை செய்யும் புகைப்படக்காரர் அனிருத் நட்பாகப் பழகி காதலிப்பதாகச் சொல்கிறார். அனிருத் காதலை ஏற்க மறுக்கும் அதுல்யா எனக்கு ஏற்கனவே அத்தை மகன் இருக்கிறார் என்று சொல்லி புரிய வைக்கிறார்.

அதோடு அனிருத்தைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது தன் காதலன் கே.ஜியிடம் அப்டேட் செய்து கொண்டே இருக்க, அவளின் இந்த நடவடிக்கையால் வெறுப்படையும் கே.ஜி அவளோடு சண்டைப் போட்டு பேசாமல் பிரிந்து விடுகிறார்.

பிரிந்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் என அத்தனை பேருமே புதுமுகங்கள் தான். ஆனால் பங்கெடுத்த எல்லோருமே படத்தில் மிகவும் சின்ஷியராக உழைப்பைக் கொடுத்து குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் ஒரு மென்மையான காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஹீரோ கே.ஜி நம் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒரு சாதாரண இளைஞனைப் போல காட்சியளிக்கிறார். படித்து முடித்தவுடன் வேலை தேடுவதே ஒரு வேலையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த மாதிரியான தருணங்களில் காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை எப்படி நகரும் என்பதை தனது கேரக்டரில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஹீரோயின் அதுல்யாவின் கவர்ந்திழுக்கும் அழகான இரண்டு கண்களைப் பார்த்தால் யாருக்குத்தான் காதல் வராது? மனுஷி காதல் காட்சிகளில் கண்களாலேயே காதல் மொழி பேசுகிறார். அந்த மாதிரியான நேரங்களில் கிறங்கி விழுவது ஹீரோ மட்டுமல்ல; படம் பார்த்துக் கொண்டிருக்கிற ரசிகர்களும் தான்! காதலில் மென்மையைக் காட்டுகிற அதே சமயத்தில் துணிச்சலான பெண் நிருபராகவும், அலுவலகத்தில் நீங்கெல்லாம் எதுக்கு இந்த பீல்டுக்கு வர்றீங்க? என்று கிண்டல் செய்யும் அனிருத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் போதும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.

பவனின் இசையில் மனசை உருக்கி எடுக்கிற மெலோடியாக கவர்கிறது ”காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ” பாடல்!

இயக்குநர் சிவராஜ் ஆர் தான் படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மலைப் பிரதேசங்களின் பச்சை பசேல் அழகையும், காட்சிகளில் கோயம்புத்தூரின் அழகையும் பந்தி வைத்திருக்கிறார்.

”பொய்யை சத்தமா பேசலாம்; உண்மையை மெதுவாக் கூட பேச முடியாது”, ”ரொம்ப மிஸ் பண்றேன். கூடத்தானே இருக்கேன். கூடவே இருக்க மாட்டல்ல?” என ஆங்காங்கே சின்னச் சின்னதாய் வரும் வசனங்களும் கவனம் ஈர்க்கிறது.

ஒரு காதல் ஜோடிக்கிடையே மூன்றாவதாக ஒருவர் வருகிற போது ஏற்படுகிற சங்கடங்களும், பின் சூழல் புரிந்து காதலர்கள் ஒன்று சேர்வது என்கிற தமிழ்சினிமாவின் பார்த்து பார்த்து புளித்துப் போன ஃபார்முலா ஸ்டோரி தான் என்று யோசிக்க வைத்தாலும் அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டாம், நாங்களே அதை ஒப்புக் கொள்கிறோம் என்று A Simple Love Story என்று சைப் டைட்டிலைப் போட்டு நம்மை வாயடைக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சிவராஜ். ஆர்.

அதே சமயம் மெதுவாக நகரும் காட்சிகளில் சிலவற்றில் கத்தரி போட்டு விட்டு எக்ஸ்ட்ரா சுவாரஷ்யங்களைச் சேர்த்திருந்தால் மெய் மறந்து கை தட்டி முழுமையாக ரசித்திருக்கலாம்!

ANEERUTHATHULYAKadhal Kan KattudheKadhal Kan Kattudhe Movie ReviewKadhal Kan Kattudhe ReviewKGPavanShivaraj R
Comments (0)
Add Comment