நடித்தவர்கள் – ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து மற்றும் பலர்
இசை – விஜய் ஷங்கர்
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இயக்கம் – யுரேகா
வகை – ஆக்ஷன் – நாடகம்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 1 மணி நேரம் 52 நிமிடங்கள்
‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ‘காட்டுப்பய சார் இந்த காளி’.
சென்னையில் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வாகனங்களை தீ வைத்து கொளுத்துகிறான் அடையாளம் தெரியாத சைக்கோ ஒருவன்.
அவன் தீயில் பொசுக்குகிற வாகனங்கள் எல்லாமே வட்டி தொழில் செய்யும் மார்வாடி ஒருவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்கள் என்று விசாரணையில் தெரிய வருகிறது.
வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் பொறுப்பை போலீஸ் அதிகாரியான ஹீரோ ஜெய்வந்த் தன் வசம் எடுக்கிறார்.
விசாரணையில் வாகனங்களுக்கு தீ வைக்கும் சைக்கோ யார்? அதுவும் ஒரு குறிப்பிட்ட வட்டி தொழில் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் வாகனங்களை மட்டும் அவன் குறி வைத்தது ஏன்? என்பதற்கான பதில்களை சஸ்பென்சோடு சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
ஹீரோ ஜெய்வந்த்தின் முரட்டுத்தனமான தோற்றம் போலீஸ் கேரக்டருக்கு ஏற்ற மிகச்சரியாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால் பெரிதாக வைத்திருக்கும் மீசையை முறுக்குவதோடும், சில காட்சிகளில் வில்லன் கோஷ்டிகளை புரட்டியெடுப்பதோடும் சரி. ‘காட்டுப்பய’ என்ற படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற்போல அதிரடிக் காட்சிகள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.
ஹீரோயின் ஐரா பெயரில் இருக்கும் வித்தியாசம் கேரக்டரில் இல்லை.
உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், வில்லன்களாக வரும் சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ், மாரிமுத்து என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம்.
மார்வாடிகளிடம் வட்டிக்கு பணம் வாங்கி அவஸ்தைப்படுபவர்களின் கஷ்டத்தை சொல்ல நினைத்த இயக்குனர் தமிழர்கள், வட மாநிலத்தவர்கள் என பிரிவினை பேசுவது கதைக்கு ஒவ்வாத விஷயமாக எரிச்சலூட்டுகிறது.
என்னமோ ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழுகிற, அதிலும் தமிழர்கள் மட்டும் தான் மார்வாடிகளிடம் வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்படுவதாகவும், மார்வாடிகள் அநியாய வட்டிக்கு தொழில் செய்து தமிழகர்களின் வாழ்வாதாரத்தை நலிவுறச் செய்வதாகவும் காட்டியிருப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.
ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் வந்திருக்க வேண்டிய படத்தை தமிழர்கள், மார்வாடிகள் மோதலாக மாற்றி சொதப்பி விட்டார் இயக்குனர் யுரேகா!