ஒரு தனி மனிதனின் வரலாற்றைப் படமாக்கும் போது அங்கு மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் அரேங்கேறும். கமர்சியல் சமரசத்திற்காக படைப்பாளிகள் அதைச் செய்வதுண்டு. குருப் படத்திலும் அது நடந்துள்ளது. என்றாலும் மிகைப்படுத்தப் பட்ட காட்சிகள் எல்லாமே இயல்பாக உள்ளது.
மலையாளத்தில் 30 வருடங்களுக்கு மேலாக போலீஸ் கண்ணில் பொய்யைத் தூவி தப்பித்து வரும் சுகுமார் குருப் என்ற கொள்ளையரின் கதையை தான் துல்கர் சல்மான் நடிப்பில் படமாக்கி இருக்கிறார்கள்.
ஏர்போர்ஸில் சேரும் துல்கர் அங்கே தனது கைவரிசையை காட்டுகிறார். அங்கு செய்த தவற்றை கடக்க தன்னை மரணித்து விட்டதாக அரசுக்குத் தெரிவித்துவிட்டு வெளிநாடு செல்கிறார். அங்கும் ஒரு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு திரும்பவும் ஒரு மரண விளையாட்டை விளையாடும் போது போலீஸ் அவரை மோப்பம் பிடிக்கிறது. அதில் இருந்து துல்கர் எஸ் ஆவது தான் மொத்தபடமும்.
துல்கர் சல்மானை துள்ளல் இளைஞனாக பார்த்த பலருக்கும் இப்படத்தில் ஆச்சர்யம் காத்திருக்கிறது. மிக கனமான கேரக்டரை ஜஸ்ட் லைட் தட் ஆக செய்து அசத்தியிருக்கிறார். காவல் அதிகாரியாக வரும் இந்திரஜித் உள்பட கதாநாயகி வரை அனைவரின் நடிப்பிலும் அப்படியொரு இயல்பு. முக்கியமாய் பாஸ்கர் கேரக்டர் ஓர் மாஸ்டர் பீஸ். நம்ம ஊர் பரத் ஓரிரு காட்சிகளில் வந்துபோகிறார். ஒரே காட்சியில் வரும் டொவினா தாமஸ் நெஞ்சை மொத்தமாக அள்ளுகிறார்.
படத்தின் டெக்னிக்கல் டீம் போட்டி போட்டு வேலை செய்திருக்கிறார்கள். ஆர்ட் டிப்பார்ண்ட்மெண்ட் வேலை இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. 1966 முதல் 1984 வரையிலான காட்சிகள் படத்தில் அதிகம். அவற்றை சரியாக கையாண்டிருக்கிறார்கள். துல்கர் சல்மானே படத்தைத் தயாரித்திருக்கிறார். பட்ஜெட்டை அள்ளி எறிந்திருக்கிறார். அது படத்தின் குவாலிட்டியில் தெரிகிறது. கேமராமேன் இசை அமைப்பாளர் இருவரும் படத்திற்கு பெரும்பலம். இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் ரைட்டிங்கில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். என்றாலும் முன்பாதி திரைக்கதையில் இன்னும் கூட கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாம்.
இப்படியான ஒரு பெரும் குற்றவாளியை ஹீரோயிசமாக காட்டுவதில் உடன்பாடில்லை என்றாலும் உண்மைச் சொல்லப்பட்டாக வேண்டும் என்ற காரணத்திற்காகவும், படத்தின் அசத்தலான திரைக்கதைக்காவும் படத்தைப் பார்க்கலாம்
3/5