தனக்கு ஒரு கஷ்டம் என்றால் எந்த ஹீரோ முதலில் ஓடி வருவார் என்பதை சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் வெளிப்படையாக தெரிந்து கொண்டார்கள் ரிலீஸ் முதல் நாளில் தன் அபிமான ஹீரோவின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் சாமானிய ரசிகர்கள்.
எதிர்பார்த்த ‘பெரிய கைகள்’ எல்லாம் சைலண்ட்டாக ஒதுங்கிக் கொள்ள, எதிர்பார்க்காத வளரும் நடிகர்கள் மக்களோடு மக்களாக கலந்து நேரம், காலம் பார்க்காமல் வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவிகளை செய்தனர்.
மயில்சாமியில் ஆரம்பித்து சித்தார்த் ஆர்.ஜே.பாலாஜி, என வளரும் நடிகர்கள் எல்லோரும் வள்ளலார்களானார்கள்.
அதிலும் குறிப்பாக ரேடியோ ஜாக்கியும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவிகள் எல்லாம் எக்காலத்துக்கும் மறக்க முடியாதது.
அப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட அவரை இன்று காலை நடந்த ‘சேதுபதி’ ஆடியோ விழாவில் ரசிகர்கள் நான் ஸ்டாப்பாக ஆராவாரம் செய்து கொண்டாடினார்கள்.
விஜய் சேதுபதி, ரம்யா நம்பீஸன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்பட விழாவில் ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் ரம்யா நம்பீஸன், நடிகர் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கரு.பழனியப்பன் படத்தின் டைரக்டர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆர்.ஜே.பாலாஜியை மேடைக்கு பேச அழைத்ததும் விசில் பறக்க, கை தட்டல் வெடிக்க, அரங்கம் அதிர…! சுமார் இரண்டு நிமிடங்கள் வரை நான் ஸ்டாப்பாக ஆராவாரம் செய்தனர்.
வெள்ளத்தில் செய்த உதவிக்கு ரசிகர்கள் காட்டும் பதில் அன்பு தான் இந்த விசில் சத்தங்களும், கைதட்டல்களும் என்பதை புரிந்து கொண்ட பாஜாஜி ”போதும்ங்க… எனக்கே கூச்சமா இருக்கு…” என்றபடியே பேச ஆரம்பித்தார்.
”நான் இந்த சேதுபதி படத்துல நடிக்கல… ஆனாலும் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். ஏண்ணா இந்த படத்துல ஹீரோ விஜய் சேதுபதி, டைரக்டர் அருண்குமார், இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா மூன்று பேருமே நெருங்கிய நண்பர்கள். மூன்று பேருமே உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவர்கள். அவர்கள் நல்ல மனசுக்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையணும்” என்று சுருக்கமாக பேசிவிட்டு அமர்ந்தார்.