‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதைத் தாண்டி புதுவிதமாக இருக்கும்”- ஜிவி !

Get real time updates directly on you device, subscribe now.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய முந்திய படங்களான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நான் ரசிகன். ‘பிளாக்மெயில்’ திரைப்படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. அனைத்து வயதினரும் தங்களுடன் இந்தப் படத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

Related Posts
1 of 2

என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் மாறன் தெளிவாக எழுதியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். குறைந்த நேரம் வரக்கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்” என்றார்.

தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அவரைப் போல நிறைய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. படத்திற்கு தேவையான பணம் மட்டுமே கொடுப்பது இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆர்வம் காட்டினார். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இந்த குணத்தை அவரிடம் பார்த்து வியந்தேன். எந்த ஒரு சவால் வந்தாலும் படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்”.

தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி பேசும்போது, “திரையில் மிகவும் திறமையாக தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கொண்டு வருபவர் நடிகை பிந்து மாதவி. ’பிளாக்மெயில்’ படத்தில் வலுவான கதாபாத்திரம் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தேஜூ அஸ்வினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் இதற்கு முன்பு இவரை இப்படி பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்ரீகாந்த் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.