தமிழில் நாயகியாக களமிறங்கும் நடிகை ஆம்னியின் மருமகள்

‘சுட்டிக் குழந்தை’, ‘கோபாலா கோபாலா’, ‘பொற்காலம்’, ‘பூந்தோட்டம்’, ‘வாஞ்சி நாதன் உட்பட ஏராளமான படங்களை ரோஜா கம்பைன்ஸ் சார்பில் தயாரித்தவர் காஜா மைதீன்.
தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி.
காஜாமைதீனை திருமணம் செய்த பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸின் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் “விடியாத இரவொன்று வேண்டும்” என்ற படத்தில் கதா நாயகியாக அறிமுகமாகிறார்.
அறிமுகம் குறித்து அவரிடம் கேட்டபோது, ”எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு. அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.
அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.
நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்கு உண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். பூர்வீகம் ஆந்திரா. வளர்ந்தது தமிழ்நாடு. இப்போது பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது. இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார் ஹிரித்திகா.