‘திலகர்’ துருவாவின் ட்ராக்கை மாற்றும் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’!
பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.
‘தேவதாஸ் பிரதர்ஸ்” என்கிற ஒரு புதிய படத்தில் அப்படிப்பட்ட ஹீரோவும் இல்லை, ஹீரோயிசமும் இல்லாதபடி கதை அமைக்கப்பட்டு படமும் உருவாகி வருகிறது.
இப்படத்தை இயக்குபவர் கே.ஜானகிராமன். இவர் இயக்குநர்கள் ஐஷ்வர்யா தனுஷ், சற்குணம் ,வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்றவர். ‘3,’ ‘நய்யாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் பணியாற்றியவர்.
படத்தின் கதையை ‘திலகர்’ துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஜானி ஆகிய நால்வரும் சமபங்கு போட்டு நடித்து வருகிறார்கள். நாயகிகளில் சஞ்சிதா ஷெட்டி முக்கிய இடம் வகிக்கிறார்.
சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நான்கு இளைஞர்கள் அவர்கள். சம்பந்தமில்லாத இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே கதை. அவர்கள் யார் ? எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே திரைக்கதையின் போக்கு. இது முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கும் கதை.
‘திலகர்’ படத்தில் திடுதிப்பென வந்து மிரட்டிய துருவா, காமெடியில் வளர்ந்து வருகிற பால சரவணன், ‘ராஜ தந்திர’த்தில்’ கவனம் பெற்ற அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ படத்தில் கவனம் ஈர்த்த ஜானி என இந்த நால்வருக்கும் மேலேறும் அடுத்த சிலபடிகளாக இப்படம் அமையும் என்று நம்புகிறார்கள்.
படத்துக்கு ஒளிப்பதிவு ‘சலீம் ‘பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, இசை ”போடா போடி’ படத்துக்கு இசையமைத்த தரண், படத்தொகுப்பு ‘வேலையில்லா பட்டதாரி’யில் பணியாற்றிய எம். வி ராஜேஷ் குமார். படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் V. மதியழகன் ஆர் ரம்யா தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.