புத்தாண்டு ‘மகிழ்ச்சி’ : தயாரிப்பாளர் ஆனார் ‘கபாலி’ இயக்குநர் பா.ரஞ்சித்!

‘அட்டகத்தி’ படமூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித்.
இரண்டாவது படமாக ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது படமாக ரஜினி நடித்த ‘கபாலி’ மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார்.
இதனால் ரஜினியின் அடுத்த படத்தையும் இவரே டைரக்ட் செய்கிறார். இதுபோக சொந்தமாக ‘நீலம்’ புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் ரஞ்சித் இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ் . இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தப்படம் லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் தயாராகி வருகிறது.
இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர் இப்படத்திற்காக சிறந்த பயிற்சி எடுத்துவருகிறார். இவரது ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு : ஸ்ரீதர், கலை : ராமு
ஜனவரி மாத இறுதியில் இதன் படபிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக டைரக்ஷன் குழு நெல்லையில் தங்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.