‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ படம் தங்கை அனிதாவை ஞாபகப்படுத்தும் : சுசீந்திரன் ஓப்பன் டாக்!
எடுக்கிற படம் எதுவாக இருந்தாலும் அதில் சமூகக் கருத்து இருக்க வேண்டுமென்று நினைப்பேன். அப்படித்தான் இந்த ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ படத்தையும் எடுத்திருக்கிறேன் என்றபடியே பேச ஆரம்பித்தார் இயக்குநர் சுசீந்திரன்.
சந்தீப், விக்ராந்த், மெஹரின் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகும் பத்தாவது திரைப்படம்.
‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ படங்களில் வரிசையில் நெஞ்சில் துணிவிருந்தால் படமும் அமையும். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது.
டி. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்திருக்கிறேன். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.
என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.
வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் ஒளிப்பதிவாளர் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும்.
ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது. இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருவார்.
புதுமுகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய நூலகத்தில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்களுக்கு எப்போதுமே இடமுண்டு. இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும். மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும் என்றவர் இந்தப் படத்தின் கதையை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டேன். ஆனாலும் கண்டிப்பாக இந்தப்படம் நீட்டுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த தங்கை அனிதாவை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்” என்றார் சுசீந்திரன்.