‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Get real time updates directly on you device, subscribe now.

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ‘திரெளபதி2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்” என்றார்.

தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது” என்றார்.

தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘திரெளபதி 2’ படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம். போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.