எந்திரனோட ரெண்டாம் பாகம் தான்! : ஆனா டைட்டில் ‘2.0’
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் 2ம் பாகம்.
2.0 படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது.
பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக் பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், முதல் முறையாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயக்குனர் ஷங்கருடன் இணைகிறார்.
இப்படத்தின் துவக்க விழாவை இன்று மிகவும் எளிய முறையில் 2.0 படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலைஇயக்குனர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சரி டைட்டில் விஷயத்துக்கு வருவோம். நேற்றுவரை இப்படத்தின் டைட்டில் ‘எந்திரன்2’ என்றே ரசிகர்களால் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வந்தது, ஆனால் இன்றுகாலை லைகா நிறுவனம் 2.0 என்பது தான் படத்தின் டைட்டில் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
2.0 என்றதும் குழம்பத் தேவையில்லை. கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்கள், மொபைல் அப்ளிகேஷன்களில் அடுத்தடுத்த மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களுக்கு 2.0.2.5 என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அதுபோலத்தான் எந்திரன் படத்தின் அப்கிரேடு வெர்ஷன் தான் 2.0 என்று நுணுக்கமாக டைட்டிலை வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.