நானும் தமிழச்சி தான்; ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை : மனசு நொந்து அறிக்கை விட்டார் த்ரிஷா!
வடை சட்டியில் நல்லெண்ணையை ஊற்றுவதற்குப் பதிலாக மண்ணெண்ணையை ஊற்றினால் கொழுந்து விட்டு எரிவது சட்டி தானே?
ஏற்கனவே ‘ஜல்லிக்கட்டு’ விவகாரத்தில் சத்திய வார்த்தைகளை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள்.
இதில் த்ரிஷாவெல்லாம் எம்மாத்திரம்?
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பன்னாட்டு அமைப்பான ‘பீட்டா’ அமைப்புக்கு விளம்பர தூதராக இருக்கும் த்ரிஷாவுக்கு கணடனக் குரல்கள் எழுந்து வந்தன. இதனால் காரைக்குடி அருகே அவர் நடித்து வந்த ‘கர்ஜனை’ படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக மீம்ஸ் கிரியேட் செய்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இதைப்பார்த்து கொந்தளித்த த்ரிஷா பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது தான் தமிழ் கலாச்சாரமா? என்று கேள்வியெழுப்ப, ஏற்கனவே கொதி நிலையில் இருந்த இளவட்டங்களை த்ரிஷாவின் இந்த கருத்து கடும் கோபத்தை தந்து விட்டது.
நேற்று முழுவதும் ட்விட்டரில் காலை முதல் மாலை வரை விமர்சித்து வந்தனர். அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத த்ரிஷா இரவோடு இரவாக ட்விட்டலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து இன்றும் த்ரிஷாவுக்கு எதிரான கண்டனக் கருத்துகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், நானும் தமிழச்சி தான். நான் என்றைக்குமே ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்று மனசு நொந்து போய் விளக்கம் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
”என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றது.
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூகவலைதளத்தில் என்னுடைய டிவிட்டர் முலமாக தெரிவித்து இருக்கிறேன்.
நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள். நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள், என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய் இருந்த தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை கருத்துக் கொண்டவள் அல்ல.
என்னை புரிந்துக் கொள்ளாமல் என் மீது வீசப்படும் கண்டனங்கள், மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது. இந்த கண்டனங்களை நான் எதிர் கொண்டு, என் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் அதே நேரத்தில் சில விஷமிகளால் என்னுடைய டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டது.
அந்த விஷமிகள் என் ட்விட்டர் வழியாகவே, நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்தனர். இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம். அது நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சினையின் வீரியத்தை கண்டு நானே என் பாஸ் வெர்டையும் மாற்றி விட்டு, அதன் தொடர்ச்சியாக என் ட்விட்டர் பக்கத்தை, தற்காலிகமாக de activate செய்து விட்டேன்.
நானிந்த கடிதத்தை தயார் செய்யும் வேளையில் கூட எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும், எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரண கர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாரே தான் இருக்கிறேன்.
ஆயினும் இந்த சோதனையான கால கட்டத்தில் எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.