‘அயலான்’ இயக்குநர் எழுத்தில் உருவாகும் ‘இன்று நேற்று நாளை 2’!

Get real time updates directly on you device, subscribe now.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘கஜினிகாந்த்’, ‘இப்படிக்கு காதல்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு ‘இன்று நேற்று நாளை 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்‍கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.