பிளாக் காமெடி படமாக தயாராகும் “இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’’
கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ் மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள்ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை : மரியா ஜெரால்டு, எடிட்டிங் : அலெக்ஸ்ராஜ் ஆண்டனி, பாடல்கள் : விஜய்பிரகாஷ், சாக்ரடீஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள் விஜய்பிரகாஷ் – சாக்ரடீஸ். இயக்குபவர் விஜய்பரமசிவம். இவர் குறும்பட இயக்குனர்.
படம் பற்றி இயக்குனர் விஜய்பரமசிவமிடம் கேட்டோம்…இது முழுக்க முழுக்க காமெடி படம். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்ட கதை மாதிரியான பிளாக் காமெடி படம் இது.
மிகப்பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
அது அத்தனையும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கையாளப்படும் பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்தப் படலாம் என்றார் இயக்குனர் விஜய்பரமசிவம்.