கபடதாரி- விமர்சனம்
சரியாக கொரோனா லாக்டவுனுக்கு முன் சிபிராஜின் வால்டர் படம் வெளியானது. அதன் பின் லாக்டவுன் தளர்வில் அவரின் கபடதாரி படம் வெளியாகி இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் சினிமா ரசனையில் பெரிய அளவில் மாற்றம் ஒன்றுமில்லை. (படம் நல்லாருந்தா பார்ப்போம்) ஓடிடி எதையும் மாற்றவும் இல்லை. ஆனால் ஒரு படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் இல்லாவிட்டால் நாம் எவ்வளவு திறமையாகப் படம் எடுத்தாலும் அது சறுக்கிவிடும். கபடதாரியிலும் அந்தத் தவறு நடந்துள்ளது. டிராபிக் போலீஸாக இருக்கும் சிபிராஜுக்கு க்ரைம் டிப்பார்ட்மெண்டிற்குள் செல்ல ஆர்வம் அதிகம். அதற்கேற்றாப்போல் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த மூன்று கொலைச்சம்வம் அவர் பார்வைக்கு வருகிறது.
தன் ட்ராபிக் போலீஸ் வேலைநேரம் போக மீதி நேரத்தில் அதற்கான வேலைகளில் இறங்குகிறார் சிபிராஜ். அதற்கு நாசரும் ஜெயப்பிரகாஷும் உதவுகின்றனர். அந்தக்கொலைப் பின்னணியில் இருப்பவர்கள் யாரும் எதிர்பாராத பவரில் இருப்பவர் என்று தெரியவர, ஹீரோ அவரை எப்படி வென்றார் என்பதே மீதிக்கதை.
சி.எம்-ஐ எதோ வார்டு கவுன்சிலர் ரேஞ்சிற்கு டீல் செய்யும் தமிழ்சினிமா சாபம் எப்போது தான் தீருமோ? படத்தின் கதை முடிந்த பின்னும் ட்விஸ்ட்கள் உடைந்த பின்னும் ஏன் படத்தை இழுவையாக இழுக்க வேண்டும்? 40-ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்து போன கதை என்பதால் இயல்பாகவே நமக்கு கதை மீது அந்நியத்தன்மை வந்துவிடுவது பெரும் மைனஸ்.
படத்தில் ஆறுதல்களில் ஒன்று பின்னணி இசை. சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவிலும் நல்ல தொழில்நேர்த்தி தெரிகிறது. எடிட்டர் இன்னும் கூட கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கலாம்.நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் சிபி இன்னும் ஸ்டுடண்ட் ஆகவே இருக்கிறார். சீக்கிரம் ரெடியாகுங்க ஜி. நாசரின் நடிப்பில் மட்டும் எனர்ஜி தெறிக்கிறது. ஜெயப்பிரகாஷ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வில்லன் கதாப்பாத்திர வடிவமைப்பில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். திரைக்கதையில் இருக்கும் வேகத்தை விவேகமாக மாற்றியிருந்தால் கபடிதாரி ஈர்த்திருப்பார்.
வெரி ஸாரி
2/5