இதை செய்யுங்க… அப்புறம் பாருங்க… : பட வசூலை அதிகரிக்க விஷாலுக்கு யோசனை சொன்ன ஆட்டோக்காரர்!
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தை தயாரித்து வருகிறார்.
வருகிற 23 ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசிய போது மால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்….
முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆட்டோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்ப்பார்கள். பார்த்து விட்டு அவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்வார்கள். அதை கேட்டு திரையரங்குகளுக்கு கூட்டமும் வரும் படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது மால் தியேட்டர்களில் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இந்த தகவலை ஒரு ஆட்டோக்காரர் என்னிடம் சொன்னார்.
அவர்களின் இந்த கோரிக்கைக்கு எங்கள் ‘கத்திசண்டை’ படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தை வெளியிடும் கேமியே பிலிம்ஸ் ஜெயகுமார், படத்தின் இயக்குனர் சுராஜ் ஆகியோர் அனைத்து திரையரங்க உரிமையாளர்களிடம் ‘கத்தி சண்டை’ படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இது நடக்கும் என்றார்.