படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மஹாகாளி’ படக்குழு!

Get real time updates directly on you device, subscribe now.

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர் ரோஹித் சராஃப் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். அதேபோல், சக்திவாய்ந்த சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா, தனது முக்கியமான பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்திருந்தார்.

பூமி ஷெட்டி, மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், சுக்ராச்சார்யாவாக அக்ஷய் கன்னாவின் ஃபர்ஸ்ட் லுக்கும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, PVCU-வில் அவரது கதாபாத்திரம் குறித்து அதிக ஆர்வத்தை உருவாக்கியது.

இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மீகப் பிரம்மாண்டத்தையும், நவீன திரைப்பட தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட அளவையும் இணைக்கும் வகையில், இந்திய சினிமாவின் மிகவும் லட்சியமான புராண திரைப்படங்களில் ஒன்றாக ‘மஹாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனிக்கிறார்.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்புப் பணிகளை விரைவாக முடித்து, போஸ்ட் புரடக்சன்  பணிகளுக்கு (Post Production) செல்ல படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ‘மஹாகாளி’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்து வருகிறது.

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் விளம்பரப் பணிகள் தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.