வாழும் கலைவாணர் விவேக் – அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்

Get real time updates directly on you device, subscribe now.

‘வையம் மீடியாஸ்’ சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘எழுமின்’.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல நூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்’ கடம்பூர் ராஜு, ‘விளையாட்டு துறை அமைச்சர்’ பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, ‘ஹிப்-ஹாப்’ ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி. விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ”இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால் தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.

Related Posts
1 of 7

வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த ‘எழுமின்’ திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும்.

தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், ‘எழுமின்’ திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது. இப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்க வேண்டும்.

கோவாவிற்கு திரைப்பட விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ்சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால் தான். எனவே, நம் தமிழ் இளைஞர்கள் ‘எழுமின்’ திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

விழாவில் நடிகர் தனுஷ் பாடிய ‘எழடா…’ பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘எழு எழு…’ பாடலும் மாணவர்களுக்காக பிரம்மாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.