பரபர… விறுவிறு… : இரண்டு ஹீரோக்கள் வில்லன்கள் ஆன ‘முன்னோடி’!

Get real time updates directly on you device, subscribe now.

munnodi

”சின்ன வயசுல இருந்தே சினிமா மேல அவ்ளோ லவ் சார். அதுதான் என்னை இன்னைக்கு ஒரு படத்தை இயக்குகிற இடத்துல கொண்டு வந்து விட்டிருக்கு” இப்படி நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கும் தென்காசியிலிருந்து சென்னை வந்த அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தான் ”முன்னோடி.”

”ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்” என்கிற இக்கருத்தை இப்படத்தில் சொல்லியிருக்கும் புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் பணிபுரியாமல் இயக்குநர் ஆகியிருக்கிறார். கூடவே சோஹம் அகர்வாலுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தெலுங்கில் வளர்ந்து வரும் நாயகன் ஹரீஷ், நாயகி யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இரு கதாநாயக நடிகர்களும் இப்படத்தின் மூலம் வில்லன்கள் ஆகியிருக்கிறார்கள். இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை. என்றாலும் பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன. படப்பிடிப்பு 120 நாட்கள் நடைபெற்றுள்ளது. படம் நன்றாக வரவேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்ததால் செலவைப் பற்றி கவலைப்படவில்லை. நல்ல விஷயங்களுக்காக மெனக்கிடுவதில் ஒரு தப்புமில்லை.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் பரபர… விறுவிறு… சுவாரஷ்யம் குறையாமல் படம் பறக்கும்.

இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய் விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும். படத்திற்கு இசை பிரபுசங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல, ‘கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர்களி’ல் டைட்டில் வென்ற இசையமைப்பாளர்.

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்ஸில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்துக்கு நன்கு முன் தயாரிப்பு செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு.

‘முன்னோடி’ காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல் இருக்கும். படத்தில் காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு ஏற்றும்படி திரைக்கதை இருக்கும். படத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் காட்சிகளாகியுள்ளன. போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின் போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன். இதில் வரும் சண்டைக் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் பலநாள் நிற்கும். தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்கிறார்.

முன்னோடி டிசம்பரில் வெளியிட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத இந்தப் படத்தின் இயக்குநர் குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம்.

அப்போ வெற்றி கன்பார்ம்!