ஒரே நேரத்தில் கிடைத்த ரஜினி, கமல் பாராட்டு! – தேவிஸ்ரீபிரசாத் பரவசம்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக்கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இதுவரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகி விட்டது’ என்றார்.