2013-ல் அஜித்; 2017- ல் விஜய் : சுசீந்திரனின் ஹிட் செண்டிமெண்ட்!

‘அறம் செய்து பழகு’ என்ற டைட்டிலோடு தயாராகி வந்த படத்தை சமீபத்தில் தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பெயர் மாற்றம் செய்தார் இயக்குநர் சுசீந்திரன்.
‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் அத்தனையும் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் இப்படம் தீபாவளியன்று ரிலீசாகப் போகிறது என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவவும் அப்படியானால் நீங்கள் விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதத் துணிந்து விட்டீர்களா? என்று கேள்வியெழுப்பினர். மற்றவர்களின் பார்வை அப்படியிருந்தாலும் சுசீந்திரனின் கணக்கோ வேறு மாதிரியாக இருக்கிறது.
ஆமாம், இதுகுறுத்து இன்று அவர் கொடுத்திருக்கும் விளக்கம் இதோ :
‘‘எங்களுடைய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை, மெர்சலுடன் வருகிறோம். 2013ல் ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை அஜித் சாரின் ‘ஆரம்பம்’ படத்துடன் வெளியிட்டோம். ‘ஆரம்பம்’ படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது… என்று கூறியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
ஏற்கனவே தீபாவளிக்கு விஜய்யின் மெர்சலுடன் கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மஹாதேவகி’, அர்ஜுனின் ‘சொல்லிவிடவா’ ஆகிய படங்களும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப்பட்டியலில் தற்போது இந்தப்படமும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.