இளையராஜா எழுதிய பாடலை யுவன்ஷங்கர்ராஜா பாடினார்!

இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித் ஆர் வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
காலக் கரையான்களால் செல்லரிக்க முடியாத பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இசைஞானி அசத்தும் ஐந்து பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார். கவிஞர் பழநிபாரதி எழுதிய “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக் பாடியிருக்கிறார்.

கவிஞர் சினேகன் எழுதிய மூன்று பாடல்களில், “வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை” என்ற பாடலை ஹரிப்பிரியா பாடியிருக்கிறார். “வெச்சேன் நான் முரட்டு ஆசை…” பாடலை கன்னட திரையுலகின் முன்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார். “அழகான இசை ஒன்று ….” என்ற பாடலை கார்த்திக் – அனன்யாபட் ஜோடி பாடி இருக்கிறது.இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது கிறங்கடிக்கும் குரலில் பாடிக்கொடுத்திருக்கிறார்.