மனநிலை பாதிப்பு; தற்கொலை முயற்சி! : பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஓவியா

சில தினங்களுக்கு முன்பு தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஓவியா விரைவில் வெளியேறப் போகிறார் என்கிற தகவலை நாம் செய்தியாக்கி வெளியிட்டிருந்தோம்.
ஜூலி, ரைசா உள்ளிட்டவர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி ஏற்பட்டது தான் அதற்கு முக்கியக் காரணம் என்றும் அதில் சொல்லியிருந்தோம்.
இதற்கிடையே கடந்த சில தினங்களாகவே அடிக்கடி நிதானமின்றி மனநிலை பாதிக்கப்பட்டவரை போல நடந்து வந்த ஓவியா வீட்டில் உள்ளவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்வதில்லை. ஏன் பிக்பாஸே கூப்பிட்டு ஏதாவது செய்யச் சொன்னாலும் செய்ய முடியாது என்று பிடிவாதம் காட்டினார்.
மேலும் ஓவியா மற்றும் ஆரவ் இருவருக்குமிடையேயான லவ் சமாச்சாரத்தில் நடந்து வரும் பிரச்சனையும் நின்றபாடில்லை. இதனால் தனியாக புலம்பிக் கொண்டிருந்தவர் எப்படியாவது என்னை வெளியேற்றி விடுங்கள் என பிக்பாஸிடம் தொடர்ந்து கேட்டு வந்தார். அதோடு நேற்று முன்தினம் முதல் தன்னுடைய நடவடிக்கைகளில் பெருத்த மாற்றங்களை காண்பிக்க ஆரம்பித்தார்.

நேற்று முன் தினம் வெட்ட வெளியில் கொட்டும் மழையில் படுத்து தூங்கியவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தனர். அதோடு நீண்ட நேரம் நீச்சல் குளத்தில் தண்ணீருக்கடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றவரை ஆரவ் பார்த்து பதறிப்போய் சொல்ல மற்றவர்களும் சேர்ந்து காப்பாற்றினர்.
இப்படி உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்த ஓவியா நேற்று மாலை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு காரில் செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று நம்பினார்.
அது உண்மை தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. பலரும் அந்தப் புகைப்படம் பழைய புகைப்படம் என்றும், ஓவியா இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் தான் இருக்கிறார் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்தப் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருக்கிறதா என்று கூகுளில் தேடிப்பார்த்தால் முந்தைய தேதிகளில் இல்லவே இல்லை. ஆக அது ஓவியா நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய புகைப்படம் தான் என்று உறுதியாகத் தெரிகிறது.
மேலும் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் விசாரணைக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் ஓவியாவை அங்கிருந்து வெளியேற்றி மனநல மருத்துவர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின் இரவோடு இரவாக 11 : 30 மணி விமானத்தில் அவரது சொந்த ஊரான கொச்சினுக்கு பேக் செய்து அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது.
ஆக இன்றுமுதல் பிக்பாஸ் வீட்டில் ஓவியா இருக்க மாட்டார் என்பதே பிக் பாஸ் வீட்டிலிருந்து வரும் லேட்டஸ்ட் அப்டேட்.