தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்த தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன்!
கோ.தனஞ்செயன் எழுதிய (PRIDE OF TAMIL CINEMA -1931 to 2013) என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது இந்திய ஜனாதிபதி திரு.பிரணாப்முகர்ஜியால் இன்று தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது
தமிழ்சினிமாவை பெருமைப்படுத்திய திரைப்படங்கள்: 1931 முதல் 2013 வரை என்ற தலைப்பிட்ட இந்த புத்தகம் தேசியவிருது பெற்ற தமிழ்படங்கள் பற்றியும், இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்ட தமிழ்படங்கள் பற்றியும் ஆராய்ந்து, பலஅரிய புகைப்படங்களுடன் 614 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்ட புத்தகமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நமது நாட்டின் கலாசார பெருமைகளை நிலைநாட்டிய படங்களை பற்றிய முக்கிய தொகுப்பு உடையது இந்த புத்தகம்.
83 ஆண்டுகள் கோலோச்சும் தமிழ்சினிமாவின் பெருமை பற்றியும் தேசிய அளவில் தமிழ்படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த நடுவர்களுக்கும் சமர்பிக்கபட்ட புத்தகம் இது.
இந்தபுத்தகத்தின்ஆசிரியர்கோ. தனஞ்செயன், எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்த, ஒரு வியாபார மேலாண்மை அதிகாரி ஆவார். தற்போது டிஸ்னி–யு.டி.வி நிறுவனத்தின் பிரதான பொறுப்பில் இருக்கும் இவர் சினிமாவை பற்றிய ஆய்வு கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி பிரபலம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு இவர் எழுதிய “பெஸ்ட் ஆப் தமிழ்சினிமா” சர்வதேச அரங்கில் பெரும்பெயரைப் பெற்றது.
இன்று விருது பெற்றது பற்றி கோ.தனஞ்செயன் கூறும்போது :
“என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் இன்று. என் மனைவி மற்றும் அவர் தந்தையின் முன்னிலையில் ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது தமிழ்சினிமாவுக்கு உரித்தானது. தமிழ்சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என் புத்தகத்திற்கு கிடைத்த இந்த விருதால், தமிழ்சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது மேலும் எழுதவும் என்னை ஊக்குவிக்கிறது.” என்றார்.