தாணுவின் தாராள மனசு! : நெகிழ்ந்து பாராட்டிய ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணுவின் அணியும், விஷால் அணியும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
தேர்தலில் விஷால் ஜெயித்த பிறகு விழா நடந்த இடத்துக்கு சென்று எல்லாவற்றையும் மறந்து விஷால் அணியினரை வாழ்த்தி விட்டு வந்தார்.
இந்நிலையில் கலைப்புலி எஸ் தாணுவின் இன்னொரு தாராள மனசை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவச் செயலாளர் கே.இ. ஞானவேல் ராஜா. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
மகிழ்ச்சி!
இந்த வார்த்தையை வாசிக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் தெரியும் இது யாருக்கானது என்று!
வணக்கம்!
சமீபத்தில் ‘ஸ்கை வாக்’ மாலில் புதிதாகத் திறக்கப்பட்ட “ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல்” கடை திறப்பு விழாவிற்கு “அவர்” சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுக்க அந்த நிறுவனம் விருப்பப்பட்டது. ஆனால், அவர் செய்த செயல் நமது நிர்வாகிகள் முதற்கொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், அவர் மீது மரியாதையையும் அதிகப்படுத்தியது.
தனக்குக் கொடுக்கப் போவதாகச் சொல்லப்பட்ட அந்த லட்ச ரூபாய் தொகையை அப்படியே நமது “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க”த்தின் பெயரில் செக் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர் எவ்வளவு சிறந்தவர் என்று அருகிலிருந்து பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஈகை அவரது பிறவிக் குணம். வியாபார யுக்தியில் எல்லோரும் வியக்குமளவுக்கு எப்படி உச்சம் தொட்டாரோ, அதைவிட அதிகமாய் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு வாரி வழங்கியவர்.
எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் அதே மாறாத தும்பைப் பூ உடைக்கும், துயரம் காணாத புன்னகைக்கும் சொந்தக்காரர்.
தனக்குக் கிடைப்பதைத் தான் மட்டும் ருசிக்க எண்ணாமல், தானமாய்க் கொடுப்பதற்கு ஒரு பரந்த, பெரிய மனசு வேண்டும்.
அந்த மனசுக்குச் சொந்தக்காரர்… வேறு யாருமல்ல…
அண்ணன் தாணு அவர்கள்!
அண்ணா, நீங்கள் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கொடை எங்கள் மனங்களை நன்றியால் கசியச் செய்கிறது. நீங்கள் என்ன சங்கல்பத்தில் கொடுத்தீர்களோ, அந்த சங்கல்பம் துளியும் குறையாமல், சிதறாமல் அப்படியே நம் சங்க வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம். அந்த நன்மையினால் உண்டாகும் அதிர்வலை அப்படியே சிந்தாமல், சிதறாமல் உங்கள் மன உள்ளறையை வந்து அடையட்டும். நெகிழ்ச்சியோடு எல்லா உறுப்பினர்களின் சார்பாகவும் எங்களின் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு கே.இ.ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.