‘மறதி’ என்று ஒன்று இருக்கும் வரை என் படம் புதுசுதான்!
ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’
படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி, ‘அரசு’சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர்.
பொருட்செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும். அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம் தான் ‘ரீங்காரம்’
இது வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக்களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.
இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள் தான். பாலா என்கிற புதுமுகம் நாயகன். பிரியாங்கா நாயகி. கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர்.
இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதை தான். கோணங்களில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது : “மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனால் இதை புதுசு என்று சொல்ல மாட்டேன்.” என்கிறார்.
கதை பற்றி இயக்குநர் கூறும்போது : எல்லா சொற்களும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்கிற வாய்கள் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும் வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப்படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ‘ரீங்காரம்’ “என்கிறார்.