தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே! – ஒரு இளம் நாயகியின் வேதனை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா.

கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.

மேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

நேற்று நடந்த சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என திரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் அவர் இப்படிப் பேசினார்:

“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் பேசுவது கூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

ப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்றார்.

அடுத்து பேசிய நடிகர் விவேக் ஒருபடி மேலே போய், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.