விஷால் ஏன் விவசாயிகளுக்கு உதவி செய்கிறார்? – இயக்குனருக்கு வந்த டவுட்டு
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘விஷால் 25’ விழா செப்-24ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் ”விஷால் 25” நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். இதை ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் பேசிய விஷால் ”இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதேபோல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்” என்றார்.
அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ், விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது” என்றார் பாண்டிராஜ்.