“ஜோக்கர்” படத்தின் மூலம் சாமானியருக்கு கிடைத்த தேசிய விருது!
‘ஜோக்கர்’ படத்தில் இடம்பெற்ற ஜாஸ்மின் பாடலைப் பாடிய பின்னணிப் பாடகர் சுந்தர் ரய்யருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான 2017-ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கும் பாடகர் சுந்தர் ரய்யர் நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று மனம் நெகிழக் கூறினார்.
விருது கிடைத்தது பற்றி மேலும் அவர் பேசியதாவது
‘ஜோக்கர்’ படத்தின் தயாரிப்பாளர் S.R பிரபு அவர்களுக்கும், இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுக்கும், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களுக்கும் முதலில் எனது மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கிறேன். மேலும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு ‘ஜோக்கர்’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இந்திய சினிமா இத்திரைப்படத்தை முக்கிய படமாக கருதி விருதிற்காக பரிந்துரைத்த நமது தேசிய விருதுக் குழுவுக்கு மிக்க நன்றி.
என்னுடைய பாடலை சிறந்த பாடலாக அங்கீகரித்ததற்கு தேர்வு குழுவிற்கு எனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துத்கொள்கிறேன்.
நான் பெங்களூருக்கு அண்ணன் “மணல் மகுடி” நாடக குழுவுடன் நாடகம் போடுவதற்காக ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு போன் செய்தார்கள்.
நான் திரையில் பாடிய முதற்பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. என்னை போன்ற விவசாய குடும்பத்திலிருந்து வந்த சாமானியருக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. என்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன் என்றார்.