விவசாய நிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டூழியங்களை படம் பிடித்துக் காட்டும் ‘தெரு நாய்கள்’!

Get real time updates directly on you device, subscribe now.

theru-naaigal1

‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்கிறது அரசு. அப்படி சொல்லுகிற அரசு தான் விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய திட்டங்களை தொடர்ந்து அனுமதித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், நல்ல பசுமையான, செழிப்பான இடங்களை தேர்ந்தெடுத்து மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என விவசாயத்துக்கு எதிரான பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முனைப்பு காட்டுகிறது.

கார்ப்பரேட் காவாளிகளுடன் கை கோர்த்துக் கொண்டு அரசு செய்யும் இந்தப் பிரச்சனைகளை துணிச்சலுடன் பேசும் படமாகத் தயாராகி வரும் படம் தான் ”தெரு நாய்கள்.”

அறிமுக இயக்குநர் ஹரி உத்ரா இயக்கத்தில் ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நாயகனாக அப்புக்குட்டி நடித்திருக்கிறார். புதுமுகம் அக்சதா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘தெரு நாய்கள்’ என்கிற டைட்டிலுக்கும் இந்த மாதிரியான ஹைட்ரோ கார்பன் போன்ற குழாய் பதிக்கும் கார்ப்பரேட் திட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழலாம். ஆனால் கதையின் வீரியத்தை மனதில் வைத்துத்தான் இந்த டைட்டிலை படத்துக்கு வைத்தோம். படம் பார்க்கிற போது இந்தப் படத்துக்கு இந்த டைட்டில் மிகவும் பொருத்தமானது தான் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று டைட்டிலுக்காக காரணத்தை சொன்னார் இயக்குநர் ஹரி உத்ரா.

படத்தில் நாயகன், நாயகி என்று யாருமே இல்லை. கதையில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் ஒரு கதையின் நாயகர்களாக வருவார்கள். கார்ப்பரேய் அரசியலைப் பற்றி பேசும் படமாக இருந்தாலும் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தையும், தனிப்பட்ட அரசியல்வாதியையும் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக இருக்காது. அவர்களை தாக்கும் படமாகவும் இருக்காது. என்கிறார் ஹரி உத்ரா.

மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கும் இயக்குநர் படத்தை அடுத்த மாதம் மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்.