1 கோடி கேட்டு ‘உத்தம வில்லன்’ தயாரிப்பாளருக்கு மிரட்டல்?

Get real time updates directly on you device, subscribe now.

uttam1

ட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை விட சமீபகாலமாக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் ரிலீஸ் நேரத்தில் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு தான் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தான் தயாரித்த கொம்பன் படத்தை ரிலீஸ் செய்ய பட்ட பாட்டை இந்த உலகமே கண்டு வேதனையடைந்தது.

அந்த சோதனை முடிவதற்குள் அடுத்து உத்தம வில்லன் படத்தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தியேட்டர் உரிமையாளர்களால் மிரட்டப்பட்ட சம்பவம் கமல் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் டைரக்டர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரித்திருக்கிறார்.

கமலுடன் பூஜா, ஆண்ட்ரியா, நாசர், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.

சென்சாரில் எந்த ஒரு இடத்திலும் சின்ன வெட்டு கூட இல்லாமல் யு சர்ட்டிபிகேட் வாங்கிய இப்படத்தை மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டதயாரிப்பாளர் போஸ் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் 1 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கவில்லை என்றால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் ‘ரோகிணி’ பன்னீர் செல்வம் தலைமையிலான சில தியேட்டர் உரிமையாளர்கள்.

‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் தங்களுக்கு எதிராக இந்திய போட்டிகள் ஆணையத்தில் கமல் வழக்கு தொடர்ந்தது, அந்த வழக்கை நடத்தியது, அதற்காக செலவழித்தது மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட மனக்கஷ்டங்களுக்கு ஈடாக கணிசமான தொகை கொடுத்தால் தான் ரிலீசுக்கு அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திடீரென்று பணம் கேட்டிருப்பது தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

Related Posts
1 of 16

சரி பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த திருப்பதி பிரதர்ஸும், நடிகர் கமலஹாசன் தரப்பும் அபிராமி ராமநாதன், ‘ரோகிணி’ பன்னீர்செல்வம், மதுரை அண்ணாமலை ஆகியோரை அழைத்து பேசியிருக்கிறார்கள். அப்போது மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் சங்கத்தின் சார்பில் வந்த அபிராமி ராமநாதன் எங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். ஆனால் விநியோகஸ்தர்கள் சங்கமோ தங்களுக்கு ரூ 1,93,000 ஆகியுள்ளது. அதைக் கொடுங்கள் என்றார்களாம். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ‘ரோகிணி’ பன்னீரும், மதுரை அண்ணாமலையும், அப்புறம் சொல்கிறோம் என்று கூறி விட்டார்களாம்.

பிறகு தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸை தனியாக அழைத்த ‘ரோகிணி’ பன்னீர் தனக்கு ரூ 50 லட்சம், சங்கத்துக்கு ரூ 50 லட்சம் என மொத்தம் 1 கோடி ரூபாயை கொடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவர் கேட்ட தொகையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போஸ் “நானே ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் சார்… கொஞ்சம் மனசு வையுங்க…” என்று கேட்க, “உங்க படம் ரிலீஸ் ஆகணும்னா கேட்டதைக் கொடு, இல்லன்னா எப்போ உனக்கு பணம் கொடுக்க முடியுமோ அப்போ படத்தை ரிலீஸ் பண்ணிக்க..,” என்று நக்கலாகச் சொன்னாராம் ‘ரோகிணி’ பன்னீர்.

இதனால் மன வேதனையடைந்த தயாரிப்பாளர் போஸ் நேராக விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் கொண்டு போயிருக்கிறார். போஸ் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, தாணு “இது என்ன அநியாயம்?” வாங்க போய் பேசலாம் என்று சுபாஷ் சந்திர போஸை கூட்டிக்கொண்டு பன்னீரின் தி.நகர் ‘ரோகிணி’ லாட்ஜுக்குப் போயிருக்கிறார்.

அங்கே பன்னீருடன் மதுரை அண்ணாமலையும் இருந்தாராம். அவரிடம் வழக்குக்கு செலவான தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்க”, என்று தாணு கேட்டிருக்கிறார். மதுரை அண்ணாமலையோ, “எங்கள் சங்கத்திற்கு ஐம்பது லட்ச ருபாய்க்கு ஒரு பைசா குறைவா கொடுத்தாலும் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்,” என்று கூறிவிட்டு டமால் என கதவைச் சாத்தி தாணுவை அவமானப்படுத்தி விட்டாராம். எப்படியாவது சிக்கல் தீர்ந்தால் போதும் என்று நினைத்த போஸ், பன்னீருக்கு நெருக்கமான படூர் ரமேஷ் என்பவர் மூலம் பன்னீருடன் மீண்டும் பேசியுள்ளார்.

அப்போது பன்னீருக்கு ரூ 50 லட்சம், சங்கத்துக்கு ரூ 20 லட்சம் என்று முடிவாகியிருக்கிறது. முதல் கட்டமாக அடுத்த நாளே ரூ 25 லட்சத்தை மிகுந்த கஷ்டப்பட்டு கடன் வாங்கி பன்னீருக்கு கமிஷனாகக் கொடுத்த போஸ். மீதியை பிறகு புரட்டித் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் பன்னீர் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டாராம். இதனால் எரிச்சலான தயாரிப்பாளர் போஸ் 50 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிப் படமெடுத்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே..? என்கிற மனக்கஷ்டத்தில் திரையுலகில் பலரிடமும் கூறி அழுதிருக்கிறார்.

இதற்கிடையே சுபாஷ் சந்திர போஸ் மேற்கொண்டு பணம் கொடுக்காததால், தியேட்டர்காரர்களை அழைத்து, உத்தம வில்லனுக்கு ரெட் போட்டிருக்கிறது ரோகிணி பன்னீர் தலைமையிலான தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்.

இந்த நிலையில் தான், உட்லன்ட்ஸ் தியேட்டரில் திரையரங்க உரிமையாளர்களின் பொதுக்குழு கூடியிருக்கிறது. அப்போது தயாரிப்பாளர் போஸுக்கு வேண்டப்பட்ட விருதுநகர் அப்சரா தியேட்டர் ரத்னகுமார், அருப்புக்கோட்டை இளையராணி மகாராணி தியேட்டர் உரிமையாளர் தங்கபாண்டியன், சோழவந்தான் ‘ஏ’ தியேட்டர் உரிமையாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் பன்னீரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் பறிப்பு பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உடனே ‘ரோகிணி’ பன்னீர் எந்த பதிலும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு ஓடி விட்டாராம். இதனால் கடுப்பான 100க்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் ‘ரோகிணி’ பன்னீரை சங்கத்தின் எந்தப் பொறுப்பிலும் வைக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். அதோடு ‘ரோகிணி’ பன்னீர் லீசுக்கு விட்டிருக்கும் ‘ரோகிணி’ தியேட்டர்களுக்கும் இனி எந்தப் படங்களையும் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.

வழக்கு போட்ட கமலிடம் நஷ்ட ஈடு கேட்க வக்கில்லாத தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து தரமான படங்களை தனது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் தயாரித்து பல லட்சம் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளரை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவுக்கே விடப்பட்ட ஒரு எச்சரிக்கை என்பதே உண்மை!