மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிக்கும் “வடம்”!

Get real time updates directly on you device, subscribe now.

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது.

பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது.  

தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு விளையாட்டை மையமாக வைத்து வடம் படம் உருவாகிறது. மேலும் காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வைக் கூறும் கதையம்சத்துடன், கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகிறது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நடிகர் விமலின் அடுத்த திரைப்படமாக வடம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Related Posts
1 of 5

இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பாலசரவணன், நரேன், ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை பிரசன்னா எஸ் குமார் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு வி.சசிகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சியை முருகன் வழங்க, தயாரிப்பு மேற்பார்வையை K.R.பாலமுருகன் கவனிக்கிறார். இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனமும் சன் மாறோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின்  படப்பிடிப்பை மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.