தமிழர்களின் வீர அடையாளம் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது : வைரமுத்து பெருமிதம்!
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி கொடுத்ததையடுத்து அந்த விளையாட்டு நடைபெறும் தமிழக தென் மாவட்டங்களே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதும், பாராட்டு தெரிவிப்பதுமாக இருக்க கவிப்பேரரசு வைரமுத்துவும் ”தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.” என்று தன் பங்குக்கு பாராட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.
அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.