ஆன்லைன் புக்கிங், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது! : தியேட்டர்களின் கட்டண கொள்ளைக்கு ஆப்பு வைக்கும் விஷால் !

எல்லோரையும் மகிழ்விக்கும் திரையுலகம் இன்றைக்கு நலிந்து கொண்டே இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் தியேட்டர்களின் கட்டணக் கொள்ளை தான்.
வாங்குற சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் கட்டணம், ஆன்லைன் புக்கிங் கட்டணம் என இன்ன பிற கட்டணங்களையெல்லாம் சேர்த்து நாலு பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்கப் போனால் குறைந்தது 3000 ரூபாய்யையாவது செலவழித்தே ஆக வேண்டிய நிலை.
இதனாலேயே தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருகிற மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது.
இந்த மோசமான சூழலிலிருந்து எப்படியாவது சினிமாவை காப்பாற்றி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்படி ஏற்கனவே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறைந்து கொண்டிருக்கும் நிலையில் மாநில அரசு வேறு ஜி.எஸ்.டியுடன் கூடுதலாக 30 சதவீதம் உள்ளூர் வரியையும் விதித்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், அதுவரை புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் போராட்டம் நடத்தி வருகிறது விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 25 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது.
அரசின் இந்த அறிவிப்பு தியேட்டர் உரிமையாளர்களுக்கு இனிப்பாக இருந்தாலும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் அரசு விதிக்க திட்டமிட்ட 10 சதவீத கூடுதல் கேளிக்கை வரிக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வரவேற்றிருக்கிற விஷயம் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா நன்றாக இருந்தால் தான் தியேட்டர் உரிமையாளர்களும் நன்றாக இருப்பார்கள். இந்த யதார்த்தம் கூட உணராமல் சுயநலத்தோடு யோசித்த தியேட்டர் உரிமையாளர்களின் கொட்டத்தை அடக்க புதிய முடிவுகளை எடுத்திருக்கிறார் விஷால்.
அதன்படி
# இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது.
# இன்று முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.
# கேண்டீனில் MRP விலைக்குதான் விற்க வேண்டும்
# அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்.
#தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்.
# பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
# விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
#மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
போன்ற அதிரடியான புதிய விதிமுறைகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.
அதோடு இதுகுறித்து இன்று அரசாங்கத்திடமும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.