144 – விமர்சனம்
Rating : 3/5
பட்ஜெட்டில் படமெடுத்து ரசிகர்களின் ரசனைக்கு கேரண்டி தரும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் சி.வி.குமாரும், அபி அண்ட் அபி பிக்சர்ஸ் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரித்திருக்கும் அடுத்த பட்ஜெட் படம் தான் இந்த ‘144’.
டைட்டிலைப் பார்த்தவுடன் இது சீரியஸ் என்று நினைத்து விட வேண்டாம். அந்த ‘தடை உத்தர’வை காமெடியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
எரிமலைக்குண்டு, பூமலைக்குண்டு என இரண்டு கிராமத்தினருக்கும் பொதுவாக இருக்கும் குளத்தில் யார் மீன் பிடிப்பது என்பது தான் 1940 முதல் இருந்து வரும் வாய்க்கா தகராறு.
இந்த ஆண்டும் பூமலைக்குண்டு கிராம மக்கள் மீன் பிடிக்கத் தயார் ஆகிறார்கள். அதை தடுப்பதற்கு திட்டம் போடும் எரிமலைக்குண்டு கிராமத்து மக்கள் கண்ணாடியால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை அந்த குளத்துக்குள் கரைக்க முயற்சிக்கிறார்கள்.
இதனால் இரண்டு கிராமத்தினருக்கும் வழக்கம் போல தகராறு வர ‘144 தரை உத்தரவு’ போடுகிறார் மாவட்ட கலெக்டர்.
அதைப் பயன்படுத்தி தனக்கு கிடைத்த தங்க பிஸ்கெட்டுகளை விநாயகர் சிலைக்கு அடியில் கடத்தி வைத்து பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்குகிறார் இரு ஊர்களுக்குள் மத்தியஸ்தரான பெரிய மனுஷன் மதுசூதனன்.
அவரிடம் டிரைவராக வேலை செய்யும் அசோக் செல்வனும், திருட்டையே தொழிலாகக் கொண்டிருக்கும் மிர்ச்சி சிவாவும் இடையில் புகுந்து அந்த தங்க பிஸ்கெட்டுகளை தங்கம் பங்குக்கு ஆட்டைய போட கிளம்புகிறார்கள்.
தங்க பிஸ்கெட்டுகளை பறி கொடுத்த வில்லன் உதயபானு மகேஷ்வரன், அதை காசாக்க நினைக்கும் மதுசூதனனை துரத்த அவர் மிர்ச்சி சிவாவையும், அசோக் செல்வனையும் துரத்த ‘144’ தடை உத்தரவு இருக்கும் அந்த ஊருக்குள் இருக்கும் தங்க பிஸ்கெட்டுகளை யார் கைக்கு கிடைத்தது என்பதே கிளைமாக்ஸ்.
ஈரோட்டில் பிறந்து சென்னையில் வளர்ந்த அசோக் செல்வனை மதுரை மண்ணின் மைந்தனாக்கிக் காட்டியிருக்கிறார்கள். நடிப்பில் தப்பித்து விடுபவர் மதுரை பாஷையைப் பேசுவதில் ரொம்பவே கஷ்டப்படுகிறார். சில காட்சிகளில் அந்த வேதனை அப்பட்டமாகவே தெரிகிறது.
தனக்கே உரிய ‘லிப் லாக்’, ‘தரமான நகைச்சுவை’ ‘மேஜிங் அங்கிள்’ போன்ற டைமிங் வசனங்களுடன் ‘மிர்ச்சி’ சிவா செய்யும் குறும்புகள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன. ”உனக்கெல்லாம் திருடவே தெரியல…” என்று சொல்லும் போலீசிடம் சவால் விட்டு மதுசூதனனுக்கு சொந்தமான நகைக்கடைக்குள் ஓவியாவுடன் திருடப்போவதும், அதற்காக முந்தின நாளே அந்த கடைக்கு சென்று செக்யூரிட்டியை கலாய்த்துக்கொண்டே நோட்டம் விடுகிற இடங்களிலும் மிளிர்கிறார்.
‘மிர்ச்சி’ சிவா கூடவே விலைமாதுவாகவும், காதலியாகவும் வரும் ஓவியா மேக்கப் கொஞ்சமில்லை ரொம்பவே ஓவர்…( இதுக்கே பட்ஜெட்ல கனிசமான பேமெண்ட் போயிருக்கும் போல…?) அவருக்கு நேர்மாறாக அளவான மேக்கப்போடு கவர்கிறார் ஸ்ருதிராமகிருஷ்ணன்.
வாய்பேச முடியாதவராக வரும் ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் வரும் காட்சிகள் கலகலப்பு. அவர் காட்டும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன்களுக்கு வாய் பேச விட்டிருந்தால் இன்னும் காட்சிகள் களை கட்டியிருக்கும்! குறிப்பாக ஜே.சி.பியை கொண்டு வந்து இன்வெர்ட்டரை அலேக்காக திருடிக்கொண்டு போகும் காட்சியெல்லாம் காமெடியின் உச்சம்.
‘ஃபீலிங்க்ஸ்’ ரவியாக வரும் இயக்குநர் உதயபானு மகேஷ்வரன் பழைய ஜெய்சங்கர் படங்களில் வருபவரைப் போல வருகிறார். என்னதான் வில்லனாக இருந்தாலும் எதிரிகளுக்கு
வித்தியாசமான முறையில் தண்டனை கொடுப்பதெல்லாம் காமெடி தான்.
ஒரு பக்கம் நகைக்கடையை திருடக் கொடுத்து விட்டு, இன்னொரு பக்கம் தங்க பிஸ்கெட்டுகளையும் கோட்டை விட்டு விட்டு தவிக்கும் அப்பாவித்தனமான பெரிய மனுஷனாக வருகிறார்
மதுசூதனன். அந்தக் கேரக்டருக்கு செம பொருத்தம்.
அப்போது தான் ஸ்டேஷனை விட்டு நகரும் ரயிலின் வேகத்தை தவிர்த்திருக்கலாம் அறிமுக இயக்குநர் ஜி.மணிகண்டன். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு எடிட்டர் லியோ ஜான்பால் இன்னும் சில
தடவைகள் கத்தரியைப் போட்டிருக்கலாம் தப்பில்லை. இருந்தாலும் இயக்குநருக்கு டெக்னிக்கலாக பெரிதாக கை கொடுத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும், ஒளிப்பதிவாளர்
ஆர்.பி.குருதேவ்வும்.
144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் கிராமத்துக்குள் என்னென்ன சமாச்சாரங்கள் நடக்கும் என்பதை காமெடியாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜி.மணிகண்டன்.
பொதுவாக சி.வி.குமாரின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஆட்டோமெட்டிக்காக ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி விடும். அந்த எதிர்பார்ப்பை அடுத்தடுத்த படங்களில் சரியாக பூர்த்தி செய்ய
வேண்டியது அவருடைய கடமை கட்டாயம் என்பதை இந்தப்படம் உணர்த்தியிருக்கிறது.
144 – கிராமத்து காமெடித் திருவிழா!