அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உதவுங்கள் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சூர்யா வேண்டுகோள்

36 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடிகர் சிவக்குமாரின் ‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் அரசுத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி 37ம் ஆண்டாக நேற்றும் சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சிவக்குமார் மற்றும் அவருடைய புதல்வர்களும், நடிகர்களுமான சூர்யா, நடிகர் கார்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுத்தேர்வுகளில் சாதனை புரிந்த 20 மாணவ, மாணவிகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ”ஒவ்வொரு வருஷமும் குடும்ப விழாவாக நடக்கிற நிகழ்ச்சி இது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மனசை உருக்குற மாதிரியான நிகழ்வுகளை நாங்க பார்த்திருக்கிறோம். வாழ்நாள் சாதனை செய்து விட்டு மேடைகளில் இருப்பவர்களை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லை இந்த மாணவர்களும், மாணவிகளும் செய்கிற சாதனைகள். பல போராட்டகளுக்கு மத்தியில் அவர்கள் செய்கிற இந்த சாதனைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். இது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.
வசதிகள் அதிகம் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் இப்போதும் சாதனை செய்கிறார்கள். இப்போதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் தெரு விளக்கில் படிக்கின்ற மாணவர்கள் இருக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்துக்கு சரிசமமாக அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இருக்கிறது. தனியார் அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்வந்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்” சூர்யா.