மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்! : தனுஷ் ‘மகிழ்ச்சி’

எத்தனை மருமகன்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமோ என்று தெரியவில்லை.
ஆனால் தனது வாழ்நாளில் பெரும்பாக்கியத்தை பெற்றிருக்கிறார் தனுஷ்.
எந்தளவுக்கு கபாலி திரைப்படம் பெரும் புகைச்சலைக் கிளப்பியதோ அதே அளவுக்கு இதுதான்யா ரஜினிக்கான படமென்று வியந்து போனவர்களும் அதிகம்.
அந்தளவுக்கு நேர், எதிர் இன்னபிற சாதிய விமர்சனங்களையும் சகித்துக் கொண்டு வசூலில் இன்று வரை வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படம்.
தனது சாதிப்பெருமையை படத்தில் தூக்கிப் பிடிக்கிறார். இனி ரஞ்சித்துக்கு தமிழில் படம் கிடைப்பதே கஷ்டம் என்றெல்லாம் ஒரு கூட்டம் கோடம்பாக்கத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசித்திரிந்தது.
சரி சூர்யாவும் இல்லை விஜய்யும் இல்லை என்றாகி விட்டபோதும் தனது அடுத்த படம் சம்பந்தமாக வந்த புரளிகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்த இயக்குநர் ரஞ்சித் “இப்போதைக்கு திரைக்கதையை மேம்படுத்தும் பணியில் இருக்கிறேன்.” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தனது அடுத்த படம் குறித்தான எந்த செய்தியையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று சில வாரங்களுக்கு முன்பு தான் சொன்னார் ரஞ்சித்.
இதோ நேற்று இரவு ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்தான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தனுஷ்.
ஆமாம், மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதுப்படத்தை தனது உண்டர்பார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தனுஷ் தான் தயாரிக்கிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.o படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்தப்படம் முடியவும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
நிறைய பேர் இது கபாலி 2 என்று சொல்லிக்கொண்டிருக்க, ஆனால் அதை தனுஷோ, இயக்குநர் ரஞ்சித்தோ உறுதிப்படுத்தவில்லை.
எதுவாக இருந்தாலும் மீண்டும் ஒரு உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டிருக்கிறது இந்த கபாலி கூட்டணி!