வெளிநாட்ல வேலை ; கை நிறைய சம்பளம் : இளைஞர்களை யோசிக்க வைக்கும் ‘ஆகம்’

மெத்தப் படித்தவர்களின் மூளை எப்போதுமே வெளிநாட்டு வேலையைத் தான் நாடுகிறது!
இந்தியாவில் படிக்க வேண்டும், வேலை என்று வந்து விட்டால் வெளிநாடுகளுக்குப் போய் தனது அறிவார்ந்த மூளையை அடகு வைத்து விட வேண்டும்.
அதற்காக அந்த நிறுவனங்கள் தரும் லட்சக்கணக்கான சம்பளத்தில் மனம் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது.
அதன் பிறகு சொந்த வீடு, கார், எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைக்கும் எல்லையில்லா வசதிகள் இவைகளால் கவரப்படும் இளைஞர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக ஒரு படம் தயாராகியிருக்கிறது.
அது தான் ‘ஆகம்’!
ஆனந்த விகடனின் விகடன் பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறகு போதும்’ என்ற பெஸ்ட் செல்லர் தன்னம்பிக்கை நூலை எழுதிய டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் தான் இப்படத்தின் இயக்குநர்.
ஜோஸ்டார் எண்டர் பிரைசஸ் நிறுவனம் சார்பாக கோடீஸ்வர ராஜு தயாரித்திருக்கும் இதில் இர்பான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தீக்ஷீதா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், பிரேம், ரவி ராஜா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆர்.வி சரண் ஒளிப்பதிவில், மனோஜ் கியான் படத்தொகுப்பில், ஜிநேஷ் வசனங்கள் எழுத, சதீஸ் குமார் கலையமைப்பில், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
இளைஞர்களுக்கு இந்தியாவில் இல்லாத வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் படிக்கும் இளைஞர்கள் எல்லோருமே படிப்பு முடியவும் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். அது தவறு இந்தியாவில் படித்து இந்தியாவிலேயே அவர்கள் வேலை செய்திருந்தால் இந்நேரத்துக்கு நம் நாடு வல்லரசாகியிருக்கும்.
அப்படி வேலை செய்ய இந்தியாவில் இளைஞர்களுக்கு என்னென்ன தேவை? அதற்கு அரசாங்கம் எவ்விதம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து துணை நிற்க வேண்டும் என்பதையும் படமாக்கியிருக்கிறோம் என்றார் ஆனந்த்.
அப்போன்னா படம் ரொம்பப் போரடிக்குமோ..?
அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரு இந்த சீரியஸான விஷயத்தை ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய எல்லா அம்சங்களையும் சேர்த்து தான் எடுத்திருக்கிறோம்.
படம் பார்க்கிற யாருக்கும் எந்த சீனும் போரடிக்காது. நாம் சொல்ல வந்த கருத்தும் அவர்களை முழுமையாகப் போய்ச் சேரும் என்றார்.