சிக்ஸ்பேக் வெச்சா பெரிய ஹீரோவா..? : ஏ.ஆர்.முருகதாஸ் நெத்தியடி
ஈட்டியின் வெற்றிக்குப் பிறகு அதர்வா மீது தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை ஆழமாக பதிய ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் சந்தோஷ் இயக்கிய கணிதன் படமும் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அப்படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று மதியம் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் இசையமைப்பாளர் ட்ரம்ஸ் சிவமணி என்பதால் அவருடைய வாசிப்பு இல்லாமல் இருக்குமா..? டிரம்ஸ் சத்தங்கள் அரங்கத்தை அதிர வைக்க, களைகட்டியது ஆடியோ விழா.
விழாவில் ஆடியோ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது :
” இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர்.
நான் ‘துப்பாக்கி’ படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர் தான். நான் ‘கத்தி’ படம் இயக்கிய போது நான் ஒரு ‘கத்தி’ தான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள். அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்கு அவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த தாணு சார்.
என் உதவியாளர்கள் ‘அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர், ‘கணிதன்’ சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ‘துப்பாக்கி’ படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள்.
தமிழ்த்திரையுலகில் ‘கபாலி’, ‘தெறி’ என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் ‘கணிதன்’ படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ‘கபாலி’, ‘தெறி’ என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும்.
‘கணிதன்’ இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர். சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும். இந்த’கணிதன்’ படமும் அப்படியே எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது.
நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். என்றவர் சிக்ஸ்பேக் வைக்கும் ஹீரோக்களை ஒரு பிடி பிடித்தார்.
ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை. காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தாலும் அவர் உண்மையான நடிகர் என்று சொல்ல முடியாது.
நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால் தான் ஒரு நல்ல இயக்குநரை கண்டுபிடிக்க முடியும்; அடையாளம் காண முடியும். நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம்.
அஜீத் சார், விஜய் சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நல்ல கதைகளை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வேண்டும். அதர்வா சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். எனக்கு தெரிந்த வரை விஜய், அஜித்குமார் இருவரும் தான் அதிகமான புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்துள்ளனர்.
கதாநாயகர்கள் நிறைய புது டைரக்டர்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஐந்து படங்களில் அவர்கள் நடித்தால் அவற்றில் மூன்று படங்களை புதுமுக டைரக்டர்களுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்றார் ஏ.ஆர்.முருகதாஸ் நெத்தியடியாக…!