ட்விட்டர் ஆசாமிகள் சேட்டை : போலீசுக்குப் போனார் மொட்டை ராஜேந்திரன்

வில்லன் நடிகராக அறிமுகமான மொட்டை ராஜேந்திரன் இப்போது வருகின்ற படங்களில் காமெடியனாக தலை காட்ட ஆரம்பித்து விட்டார்.
அவர் வில்லானாக நடித்த போது கிடைத்த பேரும், புகழை விட காமெடியன் ஆன பிறகு அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது.
ரிலீசாகிற படங்களில் பத்தில் ஒன்பது படங்களில் அவர் தான் இருக்கிறார். அந்தளவுக்கு நடிப்பில் பிஸியாக இருக்கும் மொட்டை ராஜேந்திரனை தேவையில்லாமல் வம்புக்கிழுத்து போலீசுக்கு போகிற இக்கட்டான சூழலுக்கு தள்ளியிருக்கிறார்கள் ட்விட்டர் ஆசாமிகள்.
விஜய்யின் ‘தெறி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் தீவிரமாக நடித்து வரும் ராஜேந்திரன் சமூக வலைத்தளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால், அவர் பெயரில் போலியான ஆசாமிகள் ட்விட்டர் கணக்கை (@Rajendran_offl) ஆரம்பித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராஜேந்திரன் இதற்கு மேலும் அமைதி காத்தால் சரியில்லை என்று முடிவு செய்து ஆகஸ்ட் 22-ம் தேதியான இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்திருக்கிறார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சைபர் க்ரைம் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள்.
ராஜேந்திரன் பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கை முடக்குவதுடன் மட்டும் அல்லாது, சம்பந்தப்பட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும் காவல் துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது.