சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.

பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார்.

இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’, ‘சட்டம் என் கையில்’ போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார், ஆக்‌ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகனும், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் கதாநாயகனாக அறியப்பட்டு, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான ஆதி சாய் குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.