” சினிமாவை ஆளப்போவது ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம்”-ஆர்.கே. செல்வமணி!

Get real time updates directly on you device, subscribe now.

டிவா (டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எஃபெக்ட்ஸ் அசோசியேஷன்) 25வது கிராஃப்ட்டாக அங்கீகரிக்க வேண்டி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.  
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி,”திவாவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்! முன்பு நான் படம் செய்யும் பொழுது நினைத்ததை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும் பண உழைப்பும் தேவைப்பட்டது. அதிலும் 40% தான் எட்ட முடியும். ஆனால், இன்று அது தொழில்நுட்பத்தின் உதவியால் 100% மாறி இருக்கிறது. பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் காலகட்டத்தில் தான் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்பு ரஜினி, கமல் என நடிகர்களின் கட்டுப்பாட்டிற்கு சினிமா வந்தது. இப்போது 2025 ல் இருந்து 2050 வரையிலான காலக்கட்டத்தில் சினிமாவை ஆளப்போவது விஎஃப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பம் தான். அவர்களுக்காக ஒரு சங்கம் என்பது பெரிய விஷயம். உங்கள் திறமையை எல்லோருக்கும் கொடுங்கள். அப்பொழுது தான் நீங்களும் சினிமாவும் வளர முடியும். மூன்று வருடம் உங்கள் யூனியனை சரியாக நடத்தினால் ஃபெப்சியில் இணைய வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி இருந்தேன். இப்பொழுது இரண்டாவது வருடத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் ஃபெப்சியில் இணைவதற்கான முன்னெடுப்பை எடுப்போம். அதேபோல மத்திய மாநில அரசிடமும் பேசி உங்களை அங்கீகரிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காமல் அவர்களுடன் இணைந்து இணக்கமாக பணிபுரிவதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மையும் வாய்மையும் எப்போதும் வெல்லும். சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள்” என்றார்.